Wednesday 31 October 2012

'நிலம்' புயல் சென்னை அருகே கரையைக் கடக்கிறது

சென்னை,அக்.31(டி.என்.எஸ்) வங்க கடலில் மையம் கொண்டு இருக்கும் நீலம் புழலால் தமிழக கடலோர மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் தற்போது சென்னையை நெருங்கி கொண்டிருக்கிறது.

நேற்று வங்க கடலில் உருவெடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை அச்சம் கொள்ள செய்தது. தற்போது அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இன்று வேகமாக நகர்ந்து சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் தற்போது 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

சென்னை துறைமுகத்தில் 8ஆம் என் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதால், சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. (டி.என்.எஸ்)


புயல்களுக்குப் பெயர் பிறந்த கதை

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது புயல்களுக்கும் சூப்பராக பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த 1945ம் ஆண்டு முதலே புயல்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது. இதப் பெயரை வைத்த நாடு ஓமன். இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது.
நிலம் - பாகிஸ்தான் புயல்
இந்த சீசனில் முதல் முறையாக இந்தியப் பகுதியில் ஒரு புதிய புயல் உருவாகி இருக்கிறது, வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்திருக்கிறது. இப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான் ஆகும்.
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.

Saturday 13 October 2012

தொலைபேசி: ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன


அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன.
மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது. இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.
புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர். அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.
சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன.
இதன்படி 1923ஆம் ஆண்டு, ரூ.5 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் டெலிபோன் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது.
இதனிடையே மெல்ல மெல்ல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1224ஆக உயர்ந்தது. இது மட்டுமில்லாமல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், துறைமுகம், சால்ட் குவார்ட்ரஸ் ஆகிய இடங்களில் மக்கள் வசதிக்காக பொதுத் தொலைபேசிகளும் அமைக்கப்பட்டன.
அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோவில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன.
இந்தப் போர் தொலைபேசிகளின் பயன்பாட்டை அரசிற்கு தெளிவாகப் புரிய வைத்தது. எனவே அரசே தொலைபேசி தொழிலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று அனைவர் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.

பஜாஜ் ஸ்கூட்டர்: இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த வாகனங்களில் ஒன்றான ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இனிமேல் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று அது அறிவித்துள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டர்கள் இந்திய மக்களின் இல்லங்களுக்குப் பெருமை சேர்த்த வாகனங்களில் ஒன்று. ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த இடத்தில் இருந்தது பஜாஜ் ஸ்கூட்டர்.
ஆனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பையே ஒட்டுமொத்தமாக நிறுத்து விட்டது பஜாஜ். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பஜாஜ் சேடக் பிராண்ட் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். இது ஒரு காலத்தில் உலகிலேயே அதிக அளவில் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் திகழ்ந்ததாகும்.
பின்னர் கிறிஸ்டல் என்ற பெயரில் ஸ்கூட்டர் ஒன்றை அறிவித்தது. ஆனால் இது வெளிவரவே இல்லை. இப்போது மொத்தமாக ஸ்கூட்டர் தயாரிப்புக்கே குட் பை கூறி விட்டது பஜாஜ்.
ஸ்கூட்டர்களுக்குப் பதில் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நடுத்தர வர்க்க இந்தியாவின் பிரியமான வாகனம் மோட்டார் சைக்கிள்தான். எனவே அதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக பஜாஜ் கூறியுள்ளது.
ஹீரோ ஹோண்டாவின் வருகையால்தான் ஸ்கூட்டர்கள் மீதான இந்தியர்களின் மோகம் குறைந்து போக முக்கியக் காரணம் என்று கூறலாம்.
எப்படியோ இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

கூட்டாஞ்சோறு: சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு


கூட்டாஞ்சோறு என்பது குழந்தைகள் வட்டாரத்தில் புழங்கும் முக்கியமான சொல் ஆகும். சிறுவர், சிறுமியர் சேர்ந்து விளையாடும்போது கூட்டாகச் சேர்ந்து சோறு ஆக்கிச் சாப்பிடுதல் என்பது உற்சாகமான விஷயம். குழந்தைகள் ஒவ்வொருவரும், அவரவர் வீட்டிற்குச் சென்று, அம்மாவுக்குத் தெரியாமல், அரிசி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை எடுத்து வருவார்கள். சில சமயம் வீட்டை விட்டு வெளியேறும் போது, பெரியவர்கள் பார்த்தால் திட்டு, உதை விழும். ஓரளவு வளர்ந்த பெரிய பெண் பிள்ளைகள் தான் மூன்று கற்களைக் கட்டிவைத்து, அதன்மேல் மண்சட்டியை வைத்து, அடுப்பில் நெருப்பை எரிக்க விறகு, சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சோற்றை ஆக்கி, அதில் வெல்லம் அல்லது சர்க்கரையைக் கொட்டிக் கிண்டிச் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள் சிலவேளை அருகிலிருக்கும் திருமணமான இளம்பெண்கள் உணவு சமைப்பது எப்படி? பதம் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை வழங்குவார்கள். குழந்தைகள் கல்யாணமுருங்கை மரத்தின் இலையைப் போட்டு முன்னே உட்கார்ந்து கொள்ள, சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் அமுதம் தான்.
பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘வெடி தேங்காய்’ அருமையான உணவாகும். பெரிய தேங்காயின் மேற்பகுதியிலுள்ள கண்ணைத் திறந்து, நீரைக் குடித்துக் காலி செய்து கொள்ள வேண்டும். பொட்டுக் கடலை, வெல்லம் இரண்டையும் அம்மியில் வைத்து நசுக்கிய தூளை, தேங்காய்க்குள் திணித்து, ஓட்டையை வெல்லக் கட்டியினால் மூடிவிடுவார்கள். ஓலையைப் போட்டுத் தீயை மூட்டித் தேங்காயை அதனுள் இட்டுச் சுடுவார்கள். சூடேறிய தேங்காய் ஓடு சத்தத்துடன் வெடிக்கும். தீயை அணைத்து விட்டுத் தேங்காயை வெளியே எடுத்து, ஆற வைத்த பின்னர், எஞ்சியிருக்கும் சிரட்டையை நீக்கினால், வெல்லத்துடன் சேர்ந்து சூடான தேங்காய் மணக்கும்; சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி தேங்காயைச் சாப்பிடுவார்கள். இந்தச் செயலைத் தனி ஒரு ஆளாகச் செய்தால் அவ்வளவு சுவராசியம் இருக்காது. ஒத்த வயதுடைய சிறுவர்கள் சேர்ந்து வெடிதேங்காய் தயாரிக்கும்போது ஏற்படும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தின்பண்டம் என்றாலும், அதைத் தயாரிக்கப் பலர் கூட்டாகச் சேர்ந்து முயலுவது, எல்லோருரிடம் உற்சாகத்தைத் தரும் விஷயமாகிறது.

கிட்டிப் புள்: கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்!


கிரிக்கெட்டுக்கு ஆதி விளையாட்டு கிட்டிப் புள்! கிட்டி என்று அழைக்கப் படும் பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாகச் சீவப் பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் 'பேட்'டுக்குச் சமானமாய் இருக்கும். புள் என்று அழைக்கப் படும் வஸ்து,  உள்ளங்கை சைஸில்அதே சவுக்குக் கட்டை இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.  இதைப் பந்தாகக் கொள்ளலாம்! 
                        
ஒரு வட்டத்துக்குள் செதுக்கப் பட்டிருக்கும் சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப் பட்டு, 'கீந்த'ப் படும்! கெந்தி விடுதல் கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது. சற்று தூரத்தில் ('கீந்த'ப் படும் புள் உத்தேசமாகப் பயணம் செய்யும் தூரத்தில்) எதிர்க் கட்சி ஆட்கள் நின்றிருப்பார்கள் கீந்தப் படும் 'புள்'ளை (கையில் துண்டுடன் அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையுடன் - விக்கெட் கீப்பர் போலத்) தயாராய் நிற்கும் எதிர் டீம் ஆட்கள் கேட்ச் செய்து விட்டால் கீந்திய ஆள் அவுட். பக்க வாட்டிலோ, தலைக்கு மேலோ வேகமாக 'கீந்த'க் கூடியவர்கள் திறமை சாலிகள். 
                     
இதில் கண்டிஷன் எல்லாம் உண்டு. திரும்பி நின்று தலைகீழாய் கால்களுக்கிடையே கீந்த பெரும்பாலும் தடை விதிக்கப் படும்! வேகம் அதிகம் இருக்கும் என்பதால். நேராக நின்றுதான் கீந்த வேண்டும்!! கேட்ச் பிடிக்கப் படாமல் கீழே விழும் 'புள்'ளை எதிர் டீம் ஆட்கள் எடுத்து, கீந்தியவன் அந்த வட்டத்தின் மேல் முனையில் வைத்திருக்கும் கிட்டியை அடிக்க வேண்டும். புள்ளால் கிட்டியில் அடித்து விட்டால் கீந்தியவர் அவுட். 
                  
இதிலும் தப்பி விட்டால் அந்தப் 'புள்' எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் 'புள்'ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம். மூன்றாவது முறையும் புள்ளை மேலே எழுப்பி எவ்வளவு தூரத்தில் அடித்திருக்கிறோம் அங்கிருந்து வட்டம் வரை கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அது ஸ்கோர்!
                  
பதில் ஆட்டத்தில் எதிர் டீம் அந்த டார்கெட்டைத் தாண்ட வேண்டும்!
                         
கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்! அதே சமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் (முடிந்தால்) தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு(த்தான்) கில்லி என்று பெயர்! அபபடி அடிக்க அடிக்க கிட்டியால் வட்டம் வரை அளக்கும் ஒரு அளவை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று உயரும் ஏதோ ஒரு கட்டத்தில் 'புள்ளா'ல் அளக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஸ்கோர் செம எகிறு எகிற ஒரு வாய்ப்பு! 
                      
இந்த மாதிரி 'கில்லி' அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது(ம்) எதிர் டீம் கேப்டன் "ஸ்கோர் என்ன" என்று கேட்பார். (மற்ற சமயங்களிலும் கேட்கலாம். இப்போது கேட்டால் அடிப்பவரின் கவனத்தைக் குலைக்கலாமே!) யாராவது அவசரப் பட்டு தப்பாகச் சொல்லி விட்டால் போச்! அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலி. எனவே ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள், அல்லது கேப்டன் 'வேறு யாரும் சொல்லக் கூடாது. நான்தான் சொல்வேன்' என்று சொல்லி விடுவார்! 
              
ஆட்டத்தின் இந்த இடம் வாண்டுகள் கிரிக்கெட்டில் ஸ்கோர் கேட்ட இடத்தில் நினைவுக்கு வந்ததால்தான் முழு ஆட்டத்தைப் பற்றியும் நினைவுக்கு வந்து நினைவுகள் கூடவே நடந்தன! 
                         
கில்லி அடிக்கும் போது கேட்ச் பிடிக்க முயன்று எத்தனை முறை இரண்டு கை மணிக்கட்டுகளிலும் கிட்டியால் அடி வாங்கியிருக்கிறோம் என்று மணிக்கட்டுகள் வலியை நினைவு கூர்ந்தன. 
                      
கிட்டியாலும், புள்ளாலும் அடிவாங்கிய நாட்களும், தெருவில் தாண்டிச் செல்வோர் மீது பட்டு, சண்டை ஏற்பட்ட நாட்களும் நினைவில் நடை பயின்றன.

அம்மி ஆட்டுகல்: இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.

மின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.

மிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் "டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்

Monday 8 October 2012

தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.