Saturday 6 October 2012

கன்னித் தீவு சிந்துபாத் :

கன்னித் தீவு சிந்துபாத் : 

'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது. 

தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம். 

சிந்துபாத் ஒரு மன்னனின் இளம் தளபதி. லைலா இளவரசி. மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன். மூசா அடிக்கடி தனது மாயக் கண்ணாடியில் 'தற்போது உலக அழகி யார்?" என்று கேட்பான். மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?) உடனே தனது மந்திரப்படையை சேர்ந்த அரக்கி, ராட்சசன், குட்டி பூதம் என யாரையாவது ஒருவரை அனுப்பி அந்த அழகியை தூக்கி வர செய்வான். (பெரும்பாலான அழகிகள் இளவரசிகளாக த்தான் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?)
அப்படித்தான் ஒரு பொன்மாலைப்  பொழுதில் மாயக்கண்ணாடி லைலாவை மூசாவுக்கு காட்டிக் கொடுத்தது. சற்றும் தாமதிக்காமல் மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!) சிறிய உருவமான லைலாவை பழையபடி மாற்றும் பொறுப்பு நமது கதாநாயகன் சிந்துபாதிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான். 

No comments:

Post a Comment